×

ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ரூ.10 லட்சம் கடனால் வாலிபர் தற்கொலை: புதுவை வில்லியனூர் அருகே சோகம்

வில்லியனூர்: வில்லியனூரில் ஆன்லைன் டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை வில்லியனூர் அடுத்த சங்கரன்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலி தொழிலாளி. இவருக்கு அய்யனார் மற்றும் அருள்மணி ஆகிய 2 மகன்கள். அய்யனார், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அருள்மணி (30) ஆன்லைன் டிரேடிங் தொழில் செய்து வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அக்கம் பக்கத்தில் ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கி டிரேடிங் தொழிலை செய்து வந்ததாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் கேட்டபோது, அதனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் அவர், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அருள்மணி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அருள்மணி, திருமணம் ஆகாதவர். இப்பகுதியில் ஏற்கனவே ஒரு நபர், ஆன்லைன் டிரேடிங் செய்வதாக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கந்து வட்டியால் இந்த முடிவு
அருள்மணி தற்கொலை செய்வதற்கு முன், கடன் கொடுத்த நபர்களில் ஒருவரான சுந்தருக்கு எழுதிய கடிதத்தில், அண்ணா, எனக்கு கடன் பிரச்னை. அதுவும் கந்துவட்டி பிரச்னை. நான் பணம் வாங்கிய அனைவருக்கும் 85 சதவீதம் வட்டி கொடுத்து வருகிறேன். அதனால் அசலை கொடுக்க முடியவில்லை. கந்து வட்டி பிரச்னையால் தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன் என உருக்கமாக எழுதியுள்ளார்.

Tags : Villianur , Online trading, loss, teen suicide
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...